கவிதைகள்

palms of love

என்றென்றும் …

 

கல்லில் செதுக்கியாற்போல் நிலையாய் நின்றாய்
என்றும் மறையாமல் என்னொடு இருந்தாய்
என்நிலை குலைந்து நான்விழும் தருணம்
எனைநின் கரங்களால் தாங்கி நின்றாய்.

இருதயம் இரண்டெனினும் துடிப்போ ஒன்று
பாதை இரண்டெனினும் பயணம் ஒன்று
உள்ளம் இரண்டெனினும் உணர்வோ ஒன்று
மெய்யோ இரண்டெனினும் உயிரோ ஒன்று

உனை நான் தேடினேன் ஞாலமெங்கும்
எனை நான் வருத்தினேன் என்றென்றும்
உனை நான் கண்டேன் என்னுள்ளே
எனை நான் தொலைத்தேன் உன்னுள்ளே

அன்பெனும் சிறையில் அடைத்து வைத்தாய்
பாசமெனும் கயிற்றால் கட்டி வைத்தாய்
சிறையிலிருந்து விடுதலை நான் வேண்டேன்
கயிறுதனை விலக்கிட நான் விழையேன்

நீயும் இருப்பாய் எனைபற் றிடவே
நானும் இருப்பேன் உனையணைத் திடவே
உனைநான் தாங்கிட எனைநீ தாங்கிட
தொடர்வோம் நாம்நம் பயணம் தனையே

[My scribblings, from eons ago...]

VN:F [1.9.13_1145]
Rating: 5.5/10 (2 votes cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 2 votes)

தனிமை

பூத்துக் குலுங்கும் மரங்கள் மத்தியில்
ஓரிலை மட்டும் கொண்டதோர் மரம்

கருநிற வானில் நேற்றுபல விண்மீன்
இன்றோ விண்ணில் ஒன்றே மிச்சம்

கூட்டமாய் பறக்கும் பறவைகளுள் ஒன்று
தனியே உலவுகின்றது வானில் இன்று

ஏதும் குறையற்ற வெள்ளைத் தாளின்
நடுவே விளங்குவது கருநிறக் குறி

கதம்பமாய் தொடுத்த மலர் ஆரமதில்
உயிருடன் இருப்பதோ தனிமலர் ஒன்று

பசுமை வயலில் கதிரும் வணங்கிட
தானியம் மட்டும் ஒன்றே உள்ளது

சேர்த்து சேர்த்து இருப்பிடம் கட்டிட
கிடைத்து இருப்பது ஒருதனிச் செங்கல்

இயற்கை அளிக்கும் பாடம் நமக்கு
ஒற்றுமை என்னும் வேதமே ஆகும்
மணக்கும் மலரும் பறக்கும் பறவையும்
ஞாலத்தில் எதுவும் ஒன்றுதான் இருப்பின்
அழகை இழந்து அழிவேற்கும் உலகம்

சுற்றிலும் இருப்ப தனைத்திலும்
முற்றிலும் இறைவன் உளான்
சுற்றிலும் எதுவும் இல்லையேல்
தனியே நீயும் இருப்பின்
இறைவன் இல்லையென் றாகுமோ ?

வருத்தம் பலப்பல மனதில் குமிய
பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லையேல்
இருத்தல் வேண்டாம் உலகிலென எண்ணி
இறத்தலே மேலென எண்ணும்நிலை கொடுமை

திக்கெட்டும் சுவர்கள் மட்டுமே இருந்திட
அவற்றுடன் மட்டும் பேசும்நிலை கொடுமை

தன்னோடு தானே பேசுவதும்
எண்ணங்கள் தாமும் மோதுவதும்
விண்ணும் மண்ணும் பார்த்து
செய்வினை இன்றி தவிப்பதும்
புகழ்ச்சியில் தானும் திளைத்தாலும்
இகழ்ச்சியில் மூழ்கித் தவித்தாலும்
வாழ்வில் துணையென ஒருவர்
இல்லையேல் வாழ்தலே கொடுமை

கொலையும் கொடுமை தீண்டாமை கொடுமை
வறுமை கொடுமை – தற்
பெருமையும் கொடுமை
தீச்சொல் தீச்செயல் கொடுமை
தீயோர் தீவினை கொடுமை
இவற்றினும் கொடுமை ஒன்றும் உண்டெனில்
அதுவே மிகப்பெரும் கொடுமை -
தனிமை

VN:F [1.9.13_1145]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.9.13_1145]
Rating: 0 (from 0 votes)